விக்கிரமங்கலம் அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து

விக்கிரமங்கலம் அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-29 22:46 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளையில் இருந்து சுண்டக்குடி வரை செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் தூர சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும், வேலைக்கு செல்வோரும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அடிக்கடி விபத்து

அவசர காலத்தில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் துரிதமாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மிக மோசமாக காட்சி அளிக்கும் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவது மட்டுமின்றி, வாகனங்களும் பழுது அடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அம்பலவர் கட்டளை-சுண்டக்குடி சாலையை விரைவில் சீர் செய்திட வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்