இன்று முழு ஊரடங்கு: காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் திரண்ட மக்கள் போக்குவரத்து பாதிப்பு

இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் மக்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-29 23:37 GMT
தஞ்சாவூர்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதம் (ஆகஸ்டு) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி இந்த மாதத்தில் 5-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் தவிர மளிகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், இறைச்சி கடைகளும் அடைக்கப்படும். இதன்காரணமாக நேற்றுமாலை காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமானோர் தஞ்சை கீழவாசல் பகுதிக்கு வந்திருந்தனர். ஒரே நேரத்தில் அதிகம்பேர் திரண்டதால் கடைகளில் கூட்டம் அதிகஅளவில் காணப்பட்டது.

சமூக இடைவெளி இன்றி

இவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பினர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வந்ததால் கீழவாசல் பகுதிகளில் கூட்டநெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் பலர், முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். சமூக இடைவெளி இன்றி சென்று வந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

பள்ளியக்கிரஹாரம், கீழஅலங்கம் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் மீன்களை வாங்குவதற்காக நேற்றுமாலை ஏராளமானோர் கூடினர். பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்பதால் கரந்தை, பழைய கலெக்டர் அலுவலக சாலை, ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதற்காக இருசக்கர வாகனங்கள், கார்களுடன் பலர் ஒரே நேரத்தில் திரண்டனர்.

டாஸ்மாக் கடைகள்

வழக்கம்போல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி இன்றி, முக கவசம் அணியாமல் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு மதுபாட்டில்கள் வாங்குவதற்காக திரண்டனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இப்படி காய்கறிகள், மீன்கள், மதுபாட்டில்கள் வாங்குவதற்காக மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்