திருவள்ளூர் அருகே பரிதாபம் கோவில் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி

திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.

Update: 2020-08-30 01:05 GMT
திருவள்ளூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், பெரிய காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 40). இவர் காஞ்சீபுரத்தில் மிளகாய் அரைக்கும் எந்திரம் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி வாணி (35) என்ற மனைவியும், சாய் ஹரிஷ் (5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பூபதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் முதுகூர் கன்னியம்மன் கோவில் அருகே தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

அப்போது அவர்கள் கன்னியம்மன் கோவில் கூடியிருந்தபோது, அவர்களது மகன் சாய் ஹரிஷ் அங்கிருந்த சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இதற்கிடையே திடீரென சிறுவன் கோவிலுக்கு அருகிலிருந்த குளத்தில் தவறி விழுந்துவிட்டான்.

இதை அங்கிருந்தவர்கள் கவனிக்காத நிலையில் சிறுவன், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனான். இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்