ஊரடங்கால் கடன்சுமை அதிகரிப்பு: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ஊரடங்கால் கடன்சுமை அதிகரித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-30 22:46 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் காமராஜ்(வயது 35). இவருக்கும் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த சவுந்தரியாவுக்கும்(28) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 4 வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. காமராஜ் கோயம்புத்தூரில் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரான காத்தான்குடிகாடு கிராமத்திற்கு காமராஜ் வந்தார்.

இதையடுத்து அவர் வி.கைகாட்டி பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரம் இல்லாததால், கடையில் வருமானமின்றி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலரிடம் காமராஜ் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகரித்தநிலையில், மேலும் சிலரிடம் காமராஜ் கடன் கேட்டபோது, யாரும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என்ற மனவேதனையில் அவர் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) காமராஜ் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் காமராஜை மீட்டு சிகிச்சைக்காக விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காமராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் காமராஜின் மனைவி சவுந்தரியா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்