முழு ஊரடங்கு: வாகன போக்குவரத்து இன்றி கோவை வெறிச்சோடியது

முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இன்றி கோவை வெறிச்சோடியது.

Update: 2020-08-31 01:56 GMT
கோவை,

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், சிறு, குறு தொழிற்சாலைகள், பவுண்டரிகள் வர்த்தக நிறுவனங்கள் இறைச்சி கடைகள், செல்போன் விற்பனை கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

வெறிச்சோடியது

இதன் காரணமாக கோவை மாநகர பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடியது.

கோவை மாநகர் முழுவதும் முக்கிய இடங்கள், சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். காரணம் இல்லாமல் வெளியே வாகனங்களில் வலம் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் ரோந்து

ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து சென்றனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இன்றி கோவைக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் திருப்பி அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் உள்ள முக்கிய மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுதவிர சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்