மாநகராட்சி ஊழியரை கொன்று நாடகமாடிய மனைவி, மகள் கைது

மாநகராட்சி ஊழியரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, மகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-01 00:05 GMT
மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா அனுமன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது46). மும்பை மாநகராட்சி ஊழியர். இவரது மனைவி ஜாசு(39). இவர்களின் மகள் மோனிகா (22). சம்பவத்தன்று சுரேஷ் வீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இந்தநிலையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ் கண்ணாடியில் தவறி விழுந்து அது குத்தியதில் உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி, மகள் கூறினர். எனினும் பிரேத பரிசோதனையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் தாயும், மகளும் சேர்ந்து சுரேசை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. சுரேஷ், மனைவி ஜாசுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகாறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜாசுவும், மோனிகாவும் அவரது தலையை ஜன்னலில் மோத செய்து உள்ளனர். பின்னர் அதில் இருந்து உடைந்து விழுந்த கண்ணாடி துண்டால் அவரது மார்பில் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாநகராட்சி ஊழியரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, மகளை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்