காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-31 21:45 GMT
க. பரமத்தி,

தர்மபுரி மாவட்டம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரபாகரன் (வயது 23). இவர் சின்ன தாராபுரம் அருகே உள்ள அணை பாளையத்தில் அஷ்டலட்சுமி என்ற வெடிமருந்து குடோனில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார் . இந்தநிலையில் கடந்த வாரம் மீண்டும் வேலைக்கு வந்தார். நேற்று காலை வெடிமருந்து குடோனுக்கு சொந்தமான க.பரமத்தி அருகே பவுத்திரம் ஆனேரி குட்டை என்ற பகுதியில் தங்கியிருந்த வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அந்த பகுதியினர் க. பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரபாகரன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்தப் பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாம். இதனால் விரக்தியடைந்த பிரபாகரன் மீண்டும் வெடிமருந்து குடோனுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.

மேலும் செய்திகள்