கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி - கர்ப்பிணிகள் உள்பட 307 பேருக்கு பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 307 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

Update: 2020-08-31 21:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 307 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

இவர்களில் புவனகிரி, பண்ருட்டி, குமராட்சியை சேர்ந்த 4 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 2 நோயாளிகள், அண்ணாகிராமத்தை சேர்ந்த மருத்துவமனை பணியாளர், புவனகிரியை சேர்ந்த செவிலியர், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 143 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 143 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இது தவிர சென்னையில் இருந்து காட்டுமன்னார்கோவில் வந்த 2 பேர், வேலூரில் இருந்து நெல்லிக்குப்பம் வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து குமராட்சி வந்த ஒருவர், வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து கடலூர் வந்த 9 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று ஒரே நாளில் 278 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 45 வயது ஆண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சிதம்பரத்தை சேர்ந்த 59 வயது ஆண் கிண்டி கொரோனா மருத்துவமனையிலும், சிதம்பரத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது. 92 ஆயிரத்து 756 பேருக்கு பரிசோதனை செய்ததில் 11 ஆயிரத்து 447 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 5 ஆயிரத்து 436 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்