வெந்நீர் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஹீட்டரை தொட்ட 1½ வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி - வாணியம்பாடி அருகே பரிதாபம்

வாணியம்பாடி அருகே வெந்நீர் போடுவதற்காக வைத்திருந்த வாட்டர் ஹீட்டரை தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-09-01 22:45 GMT
வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 25). ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பவித்ரா (வயது 21). இவர்களது மகள் அனன்யா (வயது 1½). இந்தநிலையில் குழந்தை அனன்யாவுடன் பவித்ரா மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் பவித்ரா மட்டும் தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது வெந்நீர் போடுவதற்காக அறையில் ஒரு பிளாஸ்டிக் குடம் முழுவதும் தண்ணீர் வைத்து, அதில் வாட்டர் ஹீட்டரை வைத்து சுவிட்சை ஆன் செய்துவிட்டு பவித்ரா அறைக்கு வெளியே வேலை செய்துக் கொண்டிருந்தார்.

அந்த அறையில் அனன்யா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது விளையாட்டுத்தனமாக விபரீதத்தை அறியாமல் குழந்தை அனன்யா குடத்தின் அருகே சென்று வாட்டர்ஹீட்டரை தொட்டாள்.

அப்போது அதில் பாய்ந்த மின்சாரம் அனன்யாவை தாக்கவே அவள் சுருண்டு அலறியபடி கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு பவித்ரா ஓடிச்சென்று பார்த்தபோது குழந்தை மின்சாரம்தாக்கி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அனன்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வாணிம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்