ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-07 17:26 GMT
ஸ்ரீவைகுண்டம்,

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு, ஆத்தூர் அருகே புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வடகால், தென்கால் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் தென்திருப்பேரை கடம்பாகுளத்தில் இருந்து திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலான குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலமும் தூத்துக்குடி கோரம்பள்ளம் வரையிலான ஏராளமான குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமலைச்செடிகள்

தற்போது ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வடகால், தென்கால் ஆகியவற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல், வாழை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தடுப்பணையில் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் பரந்து விரிந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், குறைந்த அளவே பாசனத்துக்கு கிடைக்கிறது. எனவே ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்