ஆத்தூர் அருகே இடத்தகராறில் பயங்கரம்: நர்சு குத்திக்கொலை அத்தை மகன் வெறிச்செயல்

ஆத்தூர் அருகே நர்சு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அத்தை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-09 00:03 GMT
ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ஆறுமுகம் அம்மாள். இவர்களுக்கு பிரியா (வயது 26), கனகா (25) என்ற 2 மகள்கள் உண்டு.

இவர்களில் கனகா நர்சிங் முடித்துவிட்டு, ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். ஆனால், கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை.

இடத்தகராறு

இவர்களது வீட்டின் அருகே முருகேசனின் அக்காள் மீனா வசித்து வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், முருகேசனுக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தங்கராஜ் மகன் மாரியப்பன் (28), கனகா மீது ஆசீட் வீச முயன்றுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் முருகேசன் வீட்டு வாசலில் யாரோ அழைப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. பால்காரர் தான் வந்திருப்பார் என நினைத்து பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு கனகா வந்தார். அப்போது வாசலில் நின்ற மாரியப்பன், கனகாவின் கையை பிடித்து இழுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் நெஞ்சில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு, பிரியா ஓடி வந்து தடுக்க முயன்றார். இதில் அவருடைய கையிலும் கத்திக்குத்து விழுந்தது. இருவரின் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பரிதாப சாவு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன், உடனடியாக கனகாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே கனகா பரிதாபமாக இறந்தார். பிரியா, ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த கொலை குறித்து அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு பாரத் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, மாரியப்பனுக்கு திருமணம் செய்து வைக்க முருகேசனிடம் தங்கராஜ் பெண் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இடம் தொடர்பான வழக்கில் முருகேசனுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து வேலைகளையும் முருகேசனின் 2 மகள்களும் நல்ல முறையில் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளனர். எனவே, பெண் கொடுக்க மறுத்தது மற்றும் இடத்தகராறு காரணமாக கனகாவை கத்தியால் குத்தி மாரியப்பன் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறிச்செயலில் ஈடுபட்ட மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர். ஆத்தூர் அருகே நர்சை அத்தை மகனே குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்