நடிகை சஞ்சனா, டாக்டரை திருமணம் செய்தாரா? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-09-10 20:36 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றதாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் அனூப், ரவீந்திரன் ஆகியோர் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது கன்னட திரையுலகினருக்கு போதை பொருட்கள் விற்றதும், அவர்கள் அதை வாங்கி பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கன்னட பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த 8-ந் தேதி பெங்களூரு இந்திராநகரில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் சோதனை நடத்த வருவதற்கு முன்பாக நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியே சென்றதாக தகவல் வெளியானது.

டாக்டரை திருமணம் செய்தாரா?

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சனா கல்ராணியின் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் ஒரு டாக்டர் என்றும், அவரது பெயர் அஜீஸ் பாஷா என்றும் தெரியவந்தது. இதற்கிடையே சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை நடிகை சஞ்சனா கல்ராணி மறுத்தார்.

இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் அஜீஸ் பாஷா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் அமெரிக்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அஜீஸ் பாஷாவை, சஞ்சனா கல்ராணி திருமணம் செய்து கொண்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மேலும் செய்திகள்