புனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த 7 ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெம்போவுடன் கடத்தல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த 7 ஆக்சிஜன் சிலிண்டர்களை டெம்போவுடன் மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-09-13 20:41 GMT
புனே,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாளுக்கு நாள் மராட்டியத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல் ஏற்படுவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை மாவட்ட நிர்வாகம் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்து வருகிறது.

கடத்தல்

இந்தநிலையில் புனேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு 7 ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெம்போவில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் இரவு சக்கான் பகுதியில் டெம்போவை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது டெம்போவை அங்கு காணவில்லை. 7 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் டெம்போவை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனால் பதறிப்போன டிரைவர் சம்பவம் குறித்து சக்கான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, டெம்போவுடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்