கடும் கட்டுப்பாடுகளுடன் ‘நீட்’ தேர்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6 ஆயிரத்து 233 பேர் எழுதினர்

கடும் கட்டுப்பாடுகளு டன் நேற்று நடந்த நீட் தேர்வை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 6,233 பேர் எழுதினர்.

Update: 2020-09-13 23:17 GMT
நெல்லை,

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (‘நீட்‘ தேர்வு) நேற்று நடந்தது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி, தியாகராஜநகர் புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் பள்ளி, சங்கர்நகர் ஜெயேந்திரா சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காவல்கிணறு ராஜாநகர் ராஜாஸ் பொறியியல் கல்லூரி உள்பட 17 மையங்களில் நடந்தது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் உள்ள ஏ.வி.கே. இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, வேல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆகிய மையங்களில் ‘நீட்‘ தேர்வு நடந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 20 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 7,461 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 6,233 பேர் தேர்வு எழுதினர். 1,228 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நீண்ட வரிசை

மாணவ-மாணவிகள் காலை 10.30 மணிக்கே தேர்வு எழுதும் மையத்துக்கு வரத்தொடங்கினர். கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தன. மாணவ- மாணவிகள் கையுறை, முககவசம் அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் தனித்தனியாக சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சென்றனர்.

தேர்வு மையத்துக்கு உலோக பொருட்கள் அணிந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. எனவே தேர்வு மையத்துக்குள் செல்லும் மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டனர். மாணவிகளுடைய கம்மல்கள், தலையில் வைத்து இருந்த கிளிப், துப்பட்டா உள்ளிட்டவற்றை வெளியே கழற்றி வைத்து விட்டு, தேர்வு மையத்துக்கு சென்றனர்.

உடல்வெப்பநிலை

மாணவர்கள் ஷூ, பெல்ட் ஆகியவற்றை கழற்றி விட்டு, தேர்வு மையத்துக்கு சென்றனர். தேர்வு மைய நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிவிட்டு தேர்வு மையத்துக்குள் சென்றனர். தேர்வு எழுதுகிறவர்கள் தங்களது ஹால் டிக்கெட், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டைக்கான ஒரு ஆவணம் கொண்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். எனவே அந்த ஆவணங்கள் வைத்து இருந்தவர்கள் மட்டும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு மாணவர்களின் ஹால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டது. தேர்வு மைய வளாகத்துக்கு சென்ற மாணவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்துக்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. மதிய உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மாணவ -மாணவிகளை தேர்வு மையத்தில் மதியம் 1.30 மணி அளவில் உட்கார வைத்தனர். தேர்வு 2 மணிக்கு தொடங்கியது. தேர்வு மையத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தவிர வேறு யாரும் செல்ல அனுமதி வழங்கப்பட வில்லை.

பெற்றோர் கூட்டம் அலைமோதியது

தேர்வு மையத்துக்கு வெளியே பெற்றோர், உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் வெளியூர்களில் இருந்து பஸ் மூலம் வந்து இருந்தனர். சிலர் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து இருந்தனர். தேர்வு மையத்துக்கு வெளியே கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஏராளமானவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தடையில்லா மின்சாரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்