சாத்தூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சாத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-14 04:55 GMT
சாத்தூர்,

சாத்தூரில் உள்ள முக்குராந்தல் பகுதியில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ் புலிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வி முறையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் ஜீவா, தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய மாணவர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வக்கீல் பகத்சிங், ஒன்றிய செயலாளர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்