காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-14 22:49 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதிகரிப்பு

இந்த நிலையில் தற்போது மழை பொழிவு நின்றதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.37 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்