பல்லாங்குழி சாலையில் படுத்து உறங்கிய ஆசிரியர் நூதன போராட்டம் வைரல் ஆனது

பல்லாங்குழி சாலையில் படுத்து உறங்கி ஆசிரியர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது வலைத்தளத்தில் வைரல் ஆனது.

Update: 2020-09-14 22:59 GMT
அவுரங்கபாத்,

மராட்டியத்தில் பருவமழையை தொடர்ந்து ஏராளமான சாலைகள் சேதமாகி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருவதுடன் விபத்தில் சிக்கியும் வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் பலர் எண்ணற்ற வழிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவுரங்கபாத்தில் ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட நூதன போராட்டம் மற்றவர்களை கவர்வதாக இருந்தது.

அந்த நகரில் உள்ள கைசர் காலனியில் புத்தக கடை வைத்து இருப்பவர் மிர்ஜா அப்துல். இவர் உருது மற்றும் மராத்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அவுரங்காபாத்தில் மழையால் மோசமாகி கிடக்கும் சாலையை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முன்தினம் சாலையில் உள்ள பல்லாங்குழியில் படுத்து தூங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆசிரியரின் இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.

இதுகுறித்து மிர்ஜா அப்துல் கூறுகையில், “சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக விழுகிறார்கள். இதனால் மக்கள் படும் அவஸ்தைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூதன போராட்டத்தை தேர்வு செய்தேன்” என்றார்.

மேலும் செய்திகள்