தஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அலுவலகத்தில் மனு

தஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-09-15 00:58 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முத்தமிழ்நகர் சிலப்பதிகார தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன்(வயது 69). தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ரூ.3 கோடி மோசடி

நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணப்பலன்கள் மற்றும் எனது சொத்து, வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் வைத்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 7 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள், நாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களது நிதி நிறுவனத்தில் 1 வருட நிரந்தர வைப்பீடுக்கு 10.5 சதவீதம் வட்டி தருகிறோம். எனவே எங்களது நிதி நிறுவனத்தில் உங்களது பணத்தை வைப்பீடு செய்யுங்கள் என்று ஆசைவார்த்தை கூறினர்.

அதை நம்பி நானும், எனது மனைவி, மகள்கள், மருமகன்களும் அந்த நிதி நிறுவனத்தில் 22-8-2019 முதல் 15-7-2019 வரை ரூ.2½ கோடி வைப்பீடு செய்தோம். தற்போது வைப்பீடுகள் அனைத்தும் முடிவடைந்து வட்டியுடன் ரூ.2 கோடியே 99 லட்சத்து 56 ஆயிரத்து 796 தர வேண்டும். ஆனால் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்தனர். மேலும் எங்களுக்கு பணத்தை தரக்கூடாது என்ற நோக்கத்தில் வேறு சிலரும் அதனை கோருவதாக பொய்யான ஆவணங்களை தயார் செய்து வைத்துள்ளனர். பணம் கேட்டால் அடியாட்களை அழைத்து வந்து மிரட்டுகிறார்கள். இதனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது.

உரிய நடவடிக்கை

எனவே எனக்கு உரிய பணத்தை தராமல் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்