கறம்பக்குடி ஒன்றியத்தில் 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 முட்டை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது

கறம்பக்குடி ஒன்றியத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வீதம் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

Update: 2020-09-17 00:19 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் 137 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 12 ஆயிரத்து 211 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு பள்ளிகள் செயல்படாததால் இந்த மாணவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சத்துணவு மையங்கள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் புரத சத்தை மேம்படுத்தும் வகையில் முட்டை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

பெற்றோரிடம் வழங்கல்

அதன்படி கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12 ஆயிரத்து 211 பேருக்கு நேற்று தலா 10 முட்டைகள் வீதம் அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கலந்துகொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் முட்டைகளை வழங்கினார். அப்போது சத்துணவு அமைப்பாளர் குமார் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்