மாங்குடி பகுதிக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாங்குடி பகுதிக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-09-17 01:13 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்துக்கு 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 213 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஆண்டுகளாக...

இந்த நிலையில் திருவாரூர் அருகே மாங்குடி கிராமத்தில் 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய 2 ஆண்டுகள் தொடர்ந்து பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாங்குடி கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் புலிகேசி, மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்