சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வசிஷ்டபுரத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-09-17 22:49 GMT
மங்களமேடு,

மங்களமேடு அருகே உள்ள வசிஷ்டபுரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக சில இடங்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் குடிக்க பயன்படுத்த நிலையில் உவர்ப்புத்தன்மையோடு, சுகாதாரமற்ற நிலையில் வந்தது. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் கூறியும், மனு கொடுத்தும் இதுவரை சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வசிஷ்டபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்க கோரியும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளரை எந்தவித காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டிப்பதாகவும் கூறி, அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அகரம்சிகூர்- செந்துறை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்