நாகை மாவட்ட கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-09-18 02:11 GMT
நாகப்பட்டினம்,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று மகாளய அமாவாசையையொட்டி நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வழக்கமாக நாகை புதிய கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நாகை புதிய கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு குறைந்த அளவே மக்கள் வந்திருந்தனர்.

வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம், ராமேசுவரத்துக்கு இணையான தலமாகும். இங்கு நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக நேற்று காமேஸ்வரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

மேலும் செய்திகள்