கொரோனாவுக்கு 5 பேர் பலி: கர்ப்பிணிகள் உள்பட 206 பேருக்கு பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். 5 கர்ப்பிணிகள் உள்பட 206 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-09-18 14:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 206 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரத்தை சேர்ந்த 5 கர்ப்பிணிகள், சென்னையில் இருந்து மங்களூர் வந்த ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 3 பேர், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 85 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 111 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 295 ஆக உயர்ந்தது. இது வரை 14 ஆயிரத்து 789 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். நேற்று முன்தினம் வரை 178 பேர் பலியானார்கள். நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 58 வயது ஆண், சிதம்பரத்தை சேர்ந்த 57 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், நல்லூரை சேர்ந்த 71 வயது முதியவர் சென்னை அரசு மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 60 வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்