திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் கழிவுநீர் அகற்றும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-09-19 00:16 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆவடி கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 49). இவர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கழிவுநீர் அகற்றும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் வேலையை முடித்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விஸ்வநாதன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆவடி நோக்கி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை விஸ்வநாதன் ஓட்டினார். பக்தவச்சலம் பின்னால் அமர்ந்து சென்றார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பக்தவச்சலத்திற்கு இடது கை நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். விஸ்வநாதன் காயமின்றி தப்பினார்.

இதைகண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்