படப்பை அருகே கிணற்றில் தவறி விழுந்த உணவக உரிமையாளர் பலி காப்பாற்ற குதித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

படப்பை அருகே கிணற்றில் தவறி விழுந்த உணவக உரிமையாளர் பலி காப்பாற்ற குதித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

Update: 2020-09-21 00:09 GMT
படப்பை

படப்பை அருகே கிணற்றில் தவறி விழுந்த உணவக உரிமையாளர் பலியானார். அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குகன் (வயது 40). இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் உணவகம் நடத்தி வந்தார். நேற்று படப்பை அண்ணா நகரில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குகனின் சகோதரி மகன் சதீஷ் (16), மாமாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தான். அப்போது குகன் கிணற்றில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது. அங்கு இருந்தவர்கள் குகனின் உடலை மேலே தூக்கினார்கள்.

கிணற்றில் குதித்த சிறுவன் சதீஷ் மூச்சு திணறல் ஏற்பட்டு மேலே வரமுடியாமல் கிணற்றிலேயே தவித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷின் உறவினர்கள் பதற்றம் அடைந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கும், மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் சிக்கித்தவித்த சதீஷை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.

குகனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் குகனுக்கு வலிப்பு நோய் இருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்