தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை

தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-09-21 01:13 GMT
தொட்டியம்,

தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). பி.சி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியது. இவர்களுக்கு சர்வன்த் என்ற ஒரு வயது மகன் இருக்கிறான்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சரண்யா வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில், தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

சப்-கலெக்டர் விசாரணை

விசாரணையில் சரண்யா குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் ஜோதி சர்மா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்