சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்

Update: 2020-09-21 02:10 GMT
தர்மபுரி,

நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், உதவி கலெக்டர் தணிகாசலம், மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், திட்ட அலுவலர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் நிலாபுரம் செல்வம், மகேஸ்வரி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி நல்லம்பள்ளியில் நடந்த விழாவில் 1,145 பயனாளிகளுக்கும், தர்மபுரியில் 908 பயனாளிகளுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 53 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிப்காட் தொழிற்பேட்டை

விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 92 புதிய அரசு கல்லூரிகளை தொடங்கி உள்ளது. மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,666 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுமார் 1,000 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை பகுதி-1 தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அந்த தொழிற்பேட்டை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன்மூலம் இந்த மாவட்டத்திலுள்ள படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என்று கூறினார்.

விழாவில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சிவப்பிரகாசம், பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பழனிச்சாமி, அங்குராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சகிலா, வடிவேலன், கலைச்செல்வி, தாசில்தார்கள் சரவணன், ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்