கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-21 06:09 GMT
கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் கவுரிசங்கர் (வயது 36). மீனவர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இது பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கவுரிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தேவனாம்பட்டினம் கிராம மக்கள், அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை பிணவறைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கவுரிசங்கர் தனது நண்பர்களுடன் கடன் பெற்று சுருக்குமடி வலையுடன் படகு வாங்கி இருந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்து உள்ளதால் தொழிலுக்கு போக முடியாமல் அவருக்கு கடன் பிரச்சினை அதிகமாகி விட்டது. மேலும் கவுரிசங்கரின் மனைவி அவரை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாலை மறியல்

ஆகவே அரசும், மாவட்ட நிர்வாகமும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து அவர்கள் பிணவறை எதிரே கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கங்காதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் (புதுநகர்), குணசேகரன் (திருப்பாதிரிப்புலியூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை என்று, அதை எதிர்க்கும் மீனவர்களையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பரபரப்பு

இதை கேட்ட போலீசார், இது பற்றி கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். ஆகவே கலைந்து செல்லுங்கள் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு இறந்த கவுரிசங்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்