கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு

பொன்னேரி அருகே ஆன்லைன் பாடம் புரியாததால் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-09-22 01:00 GMT
பொன்னேரி,

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள அருமந்தை கிராமத்தில் வசிப்பவர் கிரி. இவரது மகள் தர்ஷினி (வயது 18). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கிடையே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

மடிக்கணினி மற்றும் செல்போன்கள் மூலம் ஆன்லைன் பாடங்களை படித்து வந்த மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் பாடம் தனக்கு புரியவில்லை என மாணவி தர்ஷனி தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து மனமுடைந்த தர்ஷினி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் கதவை மூடிவிட்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் இதையறிந்த பெற்றோர் ஓடிவந்து கதவை உடைத்து தர்ஷினியை, மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து டாக் டர்கள் தீவிரமாக அவருக்கு சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்