தூக்குப்போட்டு பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது

பேரளம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-22 02:16 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வாதண்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பானுசந்தர் (வயது34). காய்கறி வியாபாரி. இவருக்கும் கும்பகோணம் சீனிவாசநல்லூர் தென்றல் நகரை சேர்ந்த ராதா (28) என்பவருக்கும் திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து ராதாவின் தாயார் மகேஸ்வரி பேரளம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சாவில் சந்தேகம்

அதில் தனது மகள் ராதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகேஸ்வரி கூறி இருந்தார்.

புகாரின் பேரில் பேரளம் போலீசார் முதல் கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் ராதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் பானுசந்தர், பானுசந்தரின் அக்காள் சுசீதா (35), தாயார் சந்திரா (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்