மஞ்சனூத்து கிராமத்தில் ஆய்வு செய்த சப்-கலெக்டர் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை

மஞ்சனூத்து கிராமத்தில் ஆய்வு செய்த சப்-கலெக்டர் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை.

Update: 2020-09-22 03:09 GMT
பழனி,

நெய்க்காரப்பட்டி அருகே மலையடிவாரத்தில் மஞ்சனூத்து கிராமம் அமைந்துள்ளது. காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் துயரத்தில் வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து நேற்று பழனி சப்-கலெக்டர் (பொறுப்பு) அசோகன் மஞ்சனூத்து மக்களை நேரில் அழைத்து அவர்களுக்கான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் மஞ்சனூத்து கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மஞ்சனூத்து கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீடு கட்டும் பணியை தொடரவும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா வழங்கி விடுபட்டுள்ள நபர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அடிப்படை வசதிகள் செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார் பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து மஞ்சனூத்து கிராம மக்கள் கூறுகையில், எங்களை சப்-கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்தனர். மேலும் எங்கள் பகுதிக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்