2-ம் நிலை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி உபகரணங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

2-ம் நிலை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி உபகரணங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-22 22:30 GMT
திருவண்ணாமலை, 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 2-ம் நிலை காவலர் (மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை - ஆண், பெண் மற்றும் திருநங்கை), 2-ம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை - ஆண்), 2-ம் நிலை சிறைக்காவலர் (ஆண், பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) என 10 ஆயிரத்து 906 பதவிகளுக்கு பொதுத்தேர்வு கடந்த 17-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை www.tnusrbonline.org என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் முன்னணி போட்டி தேர்வு பயிற்றுனர்கள் ஆலோசனைப்படி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமூக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்வற்றில் இயங்கி வரும் Tiruvannamalai District Police என்ற பக்கத்தில் எழுத்து தேர்வு நடைபெறும் நாள் வரை எழுத்து தேர்வுக்கான பயிற்சி உபகரணங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்