மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் குப்பைகளை அகற்றுவது குறித்து கடைக்காரர்களுடன் ஆலோசனை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் நடைபெற்றது.

Update: 2020-09-23 01:46 GMT
திருபுவனை,

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, குப்பைகளை அகற்றுவது குறித்து ஆலோசனை கூறினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் உள்ள குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கடைக்காரர்களும், பொதுமக்களும் குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டவேண்டும். வீடுகள், கடைகளுக்கு வரும் துப்புரவு ஊழியர்களிடம் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது. கடைகளின் உரிமத்தை புதுப்பித்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜ், உதவி மேலாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், வணிகர்கள் நலச்சங்க தலைவர்கள் ஜெயக்குமார், வாசு, வடிவேலு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மதகடிப்பட்டு வணிகர்கள் நலச்சங்க செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்