சிறுவன், சிறுமியை கட்டி வைத்து சித்ரவதை இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை

உடன்குடி அருகே தோட்டத்தில் சிறுவன், சிறுமி கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-23 04:27 GMT
உடன்குடி,

உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் கணேசப்பாண்டி. இவருக்கு 13 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் ஆறுமுகபாண்டி மகள் அமுதா (வயது 24) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணேசபாண்டி வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டி திடீரென காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும் நாய்க்குட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அக்காள், தம்பி இருவரும் அந்த தோட்டத்துக்குள் சென்று நாய்க்குட்டியை தேடிப்பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த அமுதா, நாய்க்குட்டி அங்கே இருப்பதாக கூறி இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு இருவரையும் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் முகத்தில் மிளகாய்பொடி தூவியும், நாய்க்குட்டியை கடிக்க விட்டும் சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதில் சிறுவனும், சிறுமியும் அலறி துடித்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் விசாரணை

இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுவன், சிறுமி இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் யாரையும் அமுதா உள்ளே அனுமதிக்காததால், இதுபற்றி குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விரைந்து வந்து சிறுவன், சிறுமியை மீட்டு உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்செந்துார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்