ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கிய வழக்கில் தனியார் பள்ளி பங்குதாரர் கைது

ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கிய வழக்கில் தனியார் பள்ளிக்கூட பங்குதாரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-23 05:41 GMT
ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் பணிநியமன ஆணையை காண்பித்து பணிக்கு சேருவதற்காக வந்தார். அந்த பணிநியமன ஆணையின் மீது சந்தேகம் அடைந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியை உடனடியாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதனை செய்தபோது அந்த பணிநியமன ஆணை போலியானது என்று தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வெளிவந்த விவரம் வருமாறு:-

ரூ.7 லட்சம்

ஈரோடு சோலார் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு அவரது உறவுக்கார பெண் மூலமாக அந்தியூர் அருகே பூனாச்சி முகாசிப்புதூர் அட்டவணைப்புதூரை சேர்ந்த சரவணனுடன் (வயது 36) பழக்கம் ஏற்பட்டது. சரவணன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். ரெயில்வே காலனி அரசு பள்ளிக்கூடத்தில் அலுவலக உதவியாளர் பணி காலியாக இருப்பதாகவும், அந்த பணியை பெறுவதற்கு ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் சந்தோசிடம் சரவணன் கூறியுள்ளார். மேலும், அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் பங்குதாரரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராஜராஜேஸ்வரிதோட்டம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணியை (47) தொடர்பு கொள்ளுமாறு கேட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து சந்தோஷ் தெய்வசிகாமணியை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு, ஓரிரு நாட்களில் நியமன ஆணை வழங்கிவிடுவதாக தெய்வசிகாமணி தெரிவித்து உள்ளார். அதன்படி கடந்த 3-ந் தேதி பணிநியமன ஆணையை சரவணனுக்கு அவர் அனுப்பி உள்ளார். அந்த பணி நியமன ஆணையை பள்ளிக்கூடத் தில் காண்பித்தபோது தான் அது போலியானது என்று தெரியவந்து உள்ளது.

கைது

இந்த மோசடி சம்பவம் குறித்து சரவணன், தெய்வசிகாமணி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் சரவணனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தெய்வசிகாமணியை நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்