தேவையூர் கிராமத்தில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு

தேவையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.

Update: 2020-09-23 23:24 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவரது மகன் தினேஷ் (வயது 13). இவன் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தான்.

நேற்று காலை தினேஷ் தேவையூர் கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி குளத்துக்குள் விழுந்தான். நீச்சல் தெரியாததால் அவன் குளத்தில் மூழ்கி பலியானான்.

இந்தநிலையில் குடும்பத்தினர் தினேஷை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில் தினேஷின் உடல் குளத்தில் மிதந்தது. அப்போதுதான் அவன் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்