திருப்பாச்சேத்தியில் 108 ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

திருப்பாச்சேத்தியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-09-24 14:15 GMT
திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ளது திருப்பாச்சேத்தி. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இதுதவிர திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் விபத்தால் ஏற்படும் காயம், பிரசவ சிகிச்சை, அவசரகால சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு திருப்பாச்சேத்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் வர வேண்டும்.

மேலும் திருப்பாச்சேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர காலத்திற்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சிரமமடைந்து வந்தனர். இதுகுறித்து நீண்டநாட்களாக கோரிக்கையும் விடுத்து வந்த நிலையில் நேற்று திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்