கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் கையகப்படுத்த எதிர்ப்பு: பொதுமக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

கலெக்டர் அலுவலகம் கட்ட தங்களின் இடத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Update: 2020-09-27 12:28 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக தரங்கம்பாடி சாலை மூங்கில் தோட்டம் பால்பண்ணை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டால் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு எடுத்து, அந்த பகுதி மக்கள் பால்பண்ணை அருகே குவிந்தனர்.

இதனை அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பாதிக்காத வகையில்...

அப்போது முளப்பாக்கம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட 38 ஏக்கர் நிலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டும். பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு இடையூறாக மூங்கில் தோட்டம் பால்பண்ணை அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டக் கூடாது. அப்படி கட்டப்பட்டால் தங்களிடம் கையகப்படுத்தப்படும் நிலத்தை அதே மதிப்பீட்டில் மாற்று நிலம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்து எம்.எல்.ஏ. கூறுகையில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் கையகப்படுத்தப்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தருமபுர ஆதீனத்திடம் பேசி இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை அடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்