புதிதாக 491 பேருக்கு கொரோனா 458 பேர் குணமடைந்தனர்

புதுவையில் நேற்று புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். 458 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-09-30 22:49 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின்படி தற்போது அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதே இதற்கு காரணம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 938 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 491 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 458 பேர் குணமடைந்து உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 1லட்சத்து 84 ஆயிரத்து 810 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 736 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 27 ஆயிரத்து 544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,949 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,815 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3,134 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,077 பேர் குணமடைந்துள்ளனர்.

521 பேர் உயிரிழப்பு

புதுவையில் இதுவரை 521 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 441 பேர் புதுச் சேரியை சேர்ந்தவர்கள். 39 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த 67 வயது முதியவர், ரெட்டியார் பாளையம் மூலக்குளம் திருநகரை சேர்ந்த 63 வயது முதியவர் பலியாகி உள்ளனர்.

தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமராஜர் நகர் வாணிதாசன் தெருவை சேர்ந்த 65 வயது முதியவரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.89 சதவீதமாகவும், குணமடைவது 80.14 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்