வெள்ள நிவாரணம் வழங்காததால் நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம்

பாகல்கோட்டை அருகே வெள்ள நிவாரணம் வழங்காததால், நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-01 22:09 GMT
பாகல்கோட்டை,

வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உனகுந்தா தாலுகாவில் உள்ள அமராவதி உள்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் நேற்று அமராவதி கிராமம் வழியாக செல்லும் சோலாப்பூர்- ஒசபேட்டே தேசிய நெடுஞ்சாலையில் முட்செடிகளை வெட்டி போட்டு அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். மேலும் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த உனகுந்தா புறநகர் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவர்களை அனுப்பிவைத்தனர். பின்னர் சாலையில் போடப்பட்டிருந்த முட்செடிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்