நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி பள்ளி ஆசிரியர்கள் நூதன போராட்டம்

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நூதனமாக போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-01 22:39 GMT
புதுச்சேரி,

புதுவையில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்சன் தாரர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கைகள் நிறைவேறியபாடில்லை. இந்த நிலையில் மீண்டும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 27-ந் தேதி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கண்களில் கருப்பு துணி

நேற்று காலை கல்வித்துறை அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அரசு நிதிஉதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் நூதனமாக போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் மார்ட்டின் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியும், முககவசம் அணிந்த படியும் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பள்ளி ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் கல்வி துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்