மும்பை போலீசாரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்

மும்பை போலீசாரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-10-05 21:08 GMT
மும்பை,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதை உறுதி செய்து உள்ளது. இந்தநிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக மும்பை போலீசாரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான எய்ம்ஸ் அறிக்கையை குருட்டு பக்தர்கள் நிராகரிப்பார்களா?. சுஷாந்தின் துரதிருஷ்ட மரணம் நிகழ்ந்து 110 நாட்கள் ஆகிவிட்டன. அரசியல்வாதிகள், செய்தி சேனல்கள் நாய்களை போல குரைத்து மும்பை போலீசாரையும், அவர்களது விசாரணையையும் அவமதித்ததற்கு கண்டிப்பாக மராட்டியத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகைக்கு கேள்வி

இதேபோல மும்பை போலீசார் மீது திட்டமிட்டு அவதூறு செய்தவர்கள் மீது மாநில அரசு மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மேலும் சுஷாந்தின் மரணம் குறித்து மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா, ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவம் குறித்து அந்த நடிகை கிளசரின் போட்டு கூட ஏன் 2 சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை என அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்