சினிமா படம் தயாரிக்க உதவி செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி

சினிமா படம் தயாரிக்க பணம் உதவி செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-10-05 22:56 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பாலவாக்கம் செங்கேணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷனாஸ் பேகம் (வயது 52). இவர், நீலாங்கரை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் விழுப்புரம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நிஜாமுதீன் (51) என்பவர் சினிமா படம் தயாரிக்க பணம் உதவி செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறினார். இதை நம்பி 26 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர் பணத்தை இரட்டிப்பாக்கி தராமல் ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

ரூ.40 லட்சம் மோசடி

இது பற்றி நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அவர், சினிமா படம் தயாரிப்பதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த ரவிக்குமார் என்ற நிஜாமுதீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்