அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2020-10-06 00:24 GMT
கோவில்பட்டி,

ஓ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்-அமைச்சராக இருந்து அரசு சிறப்பாக செயல்பட துணையாக இருக்கிறார். செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறும். யார் முதலமைச்சர்? என்ற கேள்வி அங்கு எழவில்லை. வெளியில் பேசப்பட்டு தவறான கருத்துக் கள் பரப்பப்பட்டு உள்ளன. அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை. இதனை தனது டுவிட்டர் பதிவில்கூட துணை முதல்-அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவர் துணை முதல்-அமைச்சர் மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் எளிதாக சென்று பார்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாக தெரியும்.

திரையரங்குகள்பாதிக்கப்படும்

ஓ.டி.டி. என்பது மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசுக்கு கூட கட்டுப்பட்டது அல்ல. இது உலகளாவிய பிரச்சினை. கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்படாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால், திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களது பொருளாதார அடிப்படையில் ஓ.டி.டி.யில் திரைப்படங்களை வெளியிட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமான ஏற்பாடாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இது தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி. நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். திரைப்படத்துறையினர் கலந்து பேசி கொண்டுள்ளனர். விரைவில் நல்ல முடிவு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்