காசிமேடு கடற்கரையில் ஓட, ஓட விரட்டி மீனவர் வெட்டிக்கொலை 8 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

சென்னை காசிமேடு கடற்கரையில் ஓட, ஓட விரட்டி மீனவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-06 22:42 GMT
திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் தாங்கல், அப்பர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுடர்மணி (வயது 34). மீன் பிடித்தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு தேசிய நகர் பகுதியின் எதிரில் எஸ்.என்.செட்டி ரோடு கடற்கரையில் சுடர் மணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த காசிமேடு மீன் பிடித்துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, அவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சுடர்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுடர்மணி தனது நண்பரான காசிமேட்டை சேர்ந்த முரளியுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டிக்கொன்றது தெரியவந்தது. கொலையான சம்பவத்திற்கு முன்பு தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துவதாக சுடர்மணி தன்னுடைய வீட்டிற்கு போன் செய்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட சுடர்மணிக்கு செண்பக வள்ளி என்ற மனைவியும், காவியா(12) என்ற மகளும், அருண் (10) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்