திருமணமான 6 மாதத்தில் குட்டையில் மூழ்கி நேபாள வாலிபர் பலி உடலை தேடும் பணி தீவிரம்

ஓசூரில் திருமணமான 6 மாதத்தில் குட்டையில் மூழ்கி நேபாள வாலிபர் பலியானார். அவருடைய உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-10-07 15:00 GMT
ஓசூர்,

நேபாளம் பஜா என்ற இடத்தை சேர்ந்தவர் கோபால்ராஜ். இவரது மனைவி ஜானு. இவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய வசந்த் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் கோபால்ராஜ், ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகன் பிரகாஷ் (வயது 24) என்பவர், ஓசூரில் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணமாகி பசந்தி (19) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம், பிரகாஷ், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர், சானசந்திரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குளிக்க சென்றனர்.

இவர்கள் 5 பேரும் குட்டையில் குளித்தபோது திடீரென ஆழமான பகுதியில் பிரகாஷ் சிக்கிக் கொண்டார். பிரகாசை காணாமல் அதிர்ச்சியடைந்த அவர்கள் கரைக்கு வந்து கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வந்து தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாலிபரை தேடினர். அப்போது வாலிபர் ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று காலையும் பிரகாசின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் வாலிபர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்