முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Update: 2020-10-07 23:39 GMT
நெல்லை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையொட்டி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

ரெட்டியார்பட்டிநாராயணன் எம்.எல்.ஏ.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின்படி, நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலத்தில் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு, அந்த வழியாக வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எஸ்.கே.எம்.சிவகுமார், நிர்வாகிகள் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் அலுவலகம் முன்பு இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை தலைவர் கார்த்திக் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

உவரி

ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா உவரியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க. நிர்வாகி பவர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி நகர அ.தி.மு.க. சார்பில் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், முன்னாள் நகர செயலாளர்கள் ஐசக்பாண்டியன், சவுந்தர் ராஜன், நகர இளைஞர் அணி செயலாளர் மாசானம், கூட்டுறவு வங்கி இயக்குனர் மகாராஜன், ஜெயலலிதா பேரவை பொறுப்பாளர்கள் பீர்காதர், பாலச்சந்திரன், உச்சிமகாளி, ஆறுமுக நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கூடல்

முக்கூடலில் பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி. கே. சுப்பிரமணியன் தலைமையில் மரியஜேசையா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சண்முகநாதன், அவைத்தலைவர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் செய்திகள்