நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

Update: 2020-10-08 00:01 GMT
தென்காசி,

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நெல்லை மாநகர பகுதிை-யைச் சேர்தவர்கள் 26 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் 18 பேர் ஆவர்.

மேலும் மானூர், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 238 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7,550 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 856 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 228 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 505 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 123 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்