வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-08 23:47 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி சந்திரா (வயது 41). இவர் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொய் வழக்கு

பின்னர் சந்திரா கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுடைய மகன் வெங்கடேஷ் சட்ட படிப்பை முடித்துவிட்டு பார்கவுன்சிலில் பதிவு செய்ய உள்ளார். கடந்த 4-ந் தேதி ஏர்வாடி போலீசார் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வெங்கடேசை இழுத்துச் சென்றனர்.

போலீஸ் நிலையம் சென்று விசாரித்தபோது ஒரு வழக்கில் நாங்கள் தேடும் 5 பேரை அழைத்து வந்தால்தான் விடுவிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் கூறிய 5 பேரையும் தேடினோம். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று கூறியபோது எனது மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.

இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்