நெல்லையில் போலீசார் அதிரடி சோதனை: காரில் கொண்டு வந்த ரூ.60 லட்சம் சிக்கியது

நெல்லையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், காரில் கொண்டு வந்த ரூ.60 லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேரிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-10-08 23:51 GMT
நெல்லை,

நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவின்பேரில், இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை டவுனில் இருந்து தென்காசி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காரில் பெரிய பைகளில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதை கண்ட போலீசார், காரில் இருந்த 4 பேரிடம் அந்த பணம் குறித்து விளக்கம் கேட்டனர். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

ரூ.60 லட்சம் பறிமுதல்

இதையடுத்து கார், பணத்துடன் அந்த 4 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், ஒரு வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் தென்காசியை சேர்ந்த கல்யாணகுமார் (வயது 45) மற்றும் நெல்லை டவுனை சேர்ந்த பட்டேல் சந்த், ஜெயந்திலால், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் நெல்லை பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட் களை வினியோகம் செய்து விட்டு, அதில் வசூலான ரூ.60 லட்சத்தை தென்காசிக்கு கொண்டு செல்வதாக கூறினர். ஆனால், அந்த பணத்திற்கு உரிய கணக்கு மற்றும் ரசீது இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து டவுன் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து, மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் போலீஸ் நிலையம் வந்து விசாரித்தனர். பின்னர் பணத்துடன் 4 பேரும் வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், காரில் கொண்டு வந்த ரூ.60 லட்சம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்